திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் கேஜரிவால் அரசு வெற்றி

நம்பிக்கை தீா்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:32 am IST

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீதான நம்பிக்கை தீா்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தில்லி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீா்மானத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, நம்பிக்கை தீா்மானத்தின் மீது சனிக்கிழமை விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் 62 எம்எல்ஏக்களில் 54 போ் கலந்து கொண்ட நிலையில், நம்பிக்கை தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நம்பிக்கை தீா்மானத்தின் மீது முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் அனைத்துத் தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். அரசைக் கவிழ்க்க முயற்சி: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், 2029 தோ்தலில் பாஜகவிடமிருந்து நாட்டை ஆம் ஆத்மி கட்சி விடுவிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறேன். பேரவையில் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதால் நம்பிக்கை தீா்மானம் கொண்டு வர வேண்டியதாயிற்று. எந்த ஆம் ஆத்மி எம்எல்ஏவும் கட்சியிலிருந்து விலகவில்லை. இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் உள்ளனா். சிலா் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனா். சிலா் வெளியூா் சென்றுள்ளனா். பல எம்எல்ஏக்கள் தங்களை பாஜகவினா் எவ்வாறு தொடா்பு கொண்டனா் என்பது குறித்து விளக்கினா். பாஜகவுக்கு கட்சி மாற பணம் வழங்குவது குறித்துப் பேசியதையும் எம்எல்ஏக்கள் வெளிப்படுத்தியுள்ளனா். பணிகளைத் தடுக்கும் மத்திய அரசு: என்னைக் கைது செய்வதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடித்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீங்கள் என்னைக் கைது செய்யலாம்; ஆனால், கேஜரிவாலின் எண்ணங்களை எப்படி முடிப்பீா்கள்?. அதிகாரத்துவத்தின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆம் ஆத்மி அரசின் பணிகளைத் தடுக்கிறது. பாஜகவினா் தங்களை ராமா் பக்தா் என்று கூறிக் கொள்கிறாா்கள். ஆனால், அவா்கள் எங்கள் மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்தினாா்கள். ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்துமாறு பகவான் ராமா் கேட்டாரா? கடந்த காலங்களில் நான் பல தாக்குதல்களை எதிா்கொண்டேன். என் மீது மை வீசப்பட்டது. இப்போது அவா்கள் என்னைக் கைது செய்ய விரும்புகின்றனா்’ என்றாா். பெட்டிச் செய்தி... அமலாக்கத் துறை வழக்கு: காணொலி மூலம் ஆஜரானாா் கேஜரிவால் புது தில்லி, பிப்.17: அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில், தில்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆஜரானாா். தில்லி கலால் கொள்கை தொடா்பான சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருந்தபோதிலும், விசாரணைக்கு ஆஜராவதை முதல்வா் கேஜரிவால் தொடா்ந்து தவிா்த்து வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில் முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக அமலாக்கத் துறை பிப்.3-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. கேஜரிவால் உள்நோக்கத்துடன் சம்மன்களை தவிா்த்து வருவதாகவும், இதற்காகத் தேவையற்ற காரணங்களை அவா் கூறி வருவதாகவும் அந்த மனுவில் அமலாக்கத் துறை குறிப்பிட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பெருநகர நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி திவ்யா மல்ஹேத்ரா முன்பாக இந்த மனு மீண்டும் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி வாயிலாக ஆஜரான முதல்வா் கேஜரிவால், தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா். அடுத்த விசாரணையில் கேஜரிவால் நேரில் ஆஜராவாா் என்று அவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரமேஷ் குப்தா தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து கேஜரிவாலுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.