மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலாவின் மேலாளர் பன்டி பேய்ன்ஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மொஹாலி தனியார் விடுதியில் தங்கியிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா ஸ்டோரிக்களாக புகைப்படங்களைப் பதிவிட்ட 30 நிமிடங்களில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சித்து மூஸேவாலாவின் மேலாளர் பன்டி பேய்ன்ஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலுள்ள தனியார் விடுதியில் பன்டி பேய்ன்ஸ் தங்கியுள்ளார். தன் அங்கு தங்கியிருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக அடிக்கடி பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட 30 நிமிடங்களுக்குள் மர்ம நபர்கள் விடுதியில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசி அழைப்புகள் அடிக்கடி வருவதாக சமீபத்தில் காவல் துறையில் பன்டி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.