கரோனா நிலைமையை மாநில அரசு உன்னிப்பாக்கக் கவனித்து வருவதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதாரத் துறைக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் கூறியுள்ளார்.
சாஸூன் மருத்துவமனையின் வருகையின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா திரிபு வைராஸான ஜெ.என்.1 மாறுபாடு மிகவும் தீவிரமானதல்ல என்றாலும், மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் சேகரித்து வருகிறோம். மேலும் கரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கரோனாவை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் தற்போதைய நிலைமை கட்டுக்குள் உள்ளது. தனிமையில் இருந்தால் குணமடையலாம் என்றாலும் மக்கள் முகக்கவசத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் விழாயக்கிழமை நிலவரப்படி 171 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோலாப்பூர் மற்றும் கோலாப்பூரில் தலா ஒருவர் என 2 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மும்பையில் 32, அதைத் தொடர்ந்து தாணே, நவி மும்பையில் தலா 16 பதிவாகியுள்ளன. மாநிலத்தில் 914 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் ஜெ.என்.1 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.