பிரதமர் நரேந்திர மோடியை அவமதிப்பதை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசிய அவர், ''இந்திய நாட்டின் பிரதிநிதியான பிரதமரை அவமதிப்பதை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மாலத்தீவு அமைச்சர்களின் அவதூறு கருத்துகளுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக குரல் கொடுத்தது. பிரதமர் மோடி மற்றும் லட்சத்தீவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதற்காக மாலத்தீவு அமைச்சர்கள் பொதுவெளியில் மன்னிப்புக்கோர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் குரல் எழுப்பப்பட்டது.
இது குறித்து பதிலளித்த படேல், ''மன்னிப்பு கோருவது குறித்து பேசப்போவதில்லை. எங்கள் மதிப்பீடு வேறு. அவர்கள் இதுபோன்று அவதூறான கருத்துகளைக் கூறுவதை நிறுத்துவதே போதுமானது. சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக மாலத்தீவு நிர்வாகமே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் பாலிவுட் முதல் கடைகோடி சாமானியர் வரை பிரதமருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். இதுவே மாலத்தீவுக்கு பொருத்தமான பதிலடி.
மாலத்தீவில் இருந்து வருபவர்களை லட்சத்தீவில் வரவேற்போம். நம்மைத் தேடி வருபவர்களை வரவேற்பது நம் நாட்டின் கலாசாரம். அவர்கள் லட்சத்தீவுக்கு வர விரும்பினால், அதனை ஊக்குவிப்போம். அவர்களை மகிழ்விப்போம். அது எங்களையும் மகிழ்விக்கும். அவர்கள் வருவதில் தவறில்லை. விரும்பினால், கட்டாயம் வரலாம்'' எனக் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையில், மாலத்தீவு அமைச்சா்கள் உள்பட அந்நாட்டுத் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துகளால் பெரும் சா்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை எழுப்பிய இளைஞா் நலத் துறை இணையமைச்சா்கள் மால்ஷா ஷரீஃப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஜூம் மஜித் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.