மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனை கட்சியாக அறிவித்திருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படி போராடுவோம் என்று உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
இதையும் படிக்க | ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அனுமதி!
புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவு தில்லியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டப்படி இல்லை.
பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியை அழிப்பது பாஜகவின் கனவாக உள்ளது. ஆனால் சிவசேனை இப்படி முடிவடையாது. இந்த உத்தரவு ஒரு சதி.
எங்களுக்கு இது ஒரு கருப்பு நாள். பால்தாக்கரே உருவாக்கிய கட்சிக்கு இப்படிச் செய்வது மகாராஷ்டிர மக்களை முதுகில் குத்துவது போன்ற கொடுமையான செயல். பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வோம்.” என்று தெரிவித்தார்.
மேலும் “பால் தாக்கரேவின் கட்சியை திருடர்களிடம் ஒப்படைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத், பேரவைத் தலைவரின் உத்தரவை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தலைவர்களின் முடிவு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் முடிவைப் போல இருக்கும் என்று கூறினார்.