ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் நடைப்பயணத்துக்கு முன்பு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களுடன் நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தெற்கு கிழக்காக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டு கிழக்கு முதல் மேற்கு வரை நடைப்பணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மணிப்பூர் மாநிலம் இம்பாலிலிருந்து நடைப்பயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், பாஜக தலைமையிலான மணிப்பூர் அரசு நடைப்பயணத்துக்கு அனுமதி தர மறுத்தது.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்பதால் நடைப்பயணத்துக்கு அனுமதிதர இயலாது எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில், ஜனவரி 14ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடைப்பயணத்தை தொடங்க மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த பட்டியலையும் மணிப்பூர் அரசு கோரியுள்ளது.
நடைப்பயணத்துக்கான ஒப்புதலுக்காக 8 நாள்கள் காங்கிரஸ் காத்திருந்த நிலையில், 9வது நாள் நிபந்தனைகளுடன் அனுமதி கிடைத்துள்ளது.