தாங்கிக்கொள்ள முடியவில்லை.. கண் மையால் சுசனா எழுதிய கடிதம்

தனது 4 வயது மகனைக் கொலை செய்த சுசனா ஆறு வரியில், ஒரு காகிதத்தில், தனது கண் மையால் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
தாங்கிக்கொள்ள முடியவில்லை.. கண் மையால் சுசனா எழுதிய கடிதம்


தனது 4 வயது மகனைக் கொலை செய்த பெங்களூரு தலைமை செயல் அதிகாரி சுசனா, ஆறு வரியில், ஒரு காகிதத்தில், தனது கண் மையால் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இளம் தொழிலதிபரும், நன்கு கல்வியறிவு பெற்றவருமான சுசனா, தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், விவகாரத்து பெற்று மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், மகனைக் கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாமல் இருந்த நிலையில், ஒரு காகிதத்தில், அவர் கொலை செய்த மனநிலையோடு, தன் கண் மையால் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றமும், ஒரு பக்கம் கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றன. இனிமேலும் இதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று ஐலைனர் எனப்படும் கண் மையால் எழுதியிருக்கிறார்.

என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர்.. தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பிக்கிறார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை என்று பதிவு செய்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றுமொரு அதிர்ச்சியான தகவலாக, இருமல் மருந்து கொடுத்து மகனை தூங்கவைக்க, தாலாட்டும் பாடியுள்ளார் சுசனா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனியார் ஏஐ ஆய்வுக்கூட நிறுவனத் தலைமை நிர்வாகியாக இருந்து வரும் சுசானா சேத், தனது 4 வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். சொந்த மகனையே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவாவில், மகனைக் கொன்று, உடலுடன் கர்நாடகத்துக்குத் தப்பிச் செல்லும்போது, கோவா காவல்துறையினரால் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்டார். மகனைக் கொன்றதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் செய்தியாளர்களிடம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, சுசானா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் சுசானாவிடமிருந்து பிரிந்து இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். சுசானா தனது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இவர், ஜனவரி 6ஆம் தேதி கோவாவில் தனது மகனுடன் விடுதி அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். ஒரு சில நாள்கள் தங்கியிருந்த அவர் பெங்களூரு செல்ல வாடகைக் கார் கேட்டிருக்கிறார். ஜனவரி 8ஆம் தேதி அதிகாலை அவர் காரில் பெங்களூரு புறப்படுகிறார். ஆனால் அவருடன் மகன் செல்லவில்லை. பிறகு, அவர் தங்கியிருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செயத் போது, அங்கிருந்த ஆடையில் ரத்தம் படிந்திருக்கிறது. உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதும், சுசானாவிடம் தொலைபேசி வாயிலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மகன் உடன் செல்லாதது குறித்து கேட்டதற்கு, தனது நண்பருடன் அவர் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். பிறகு விசாரணையில் அவர் அளித்த முகவரி போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

கோவா காவல்துறையினர் உடனடியாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா காவல்துறையின் உதவியை நாடுகிறார்கள். கார் ஓட்டுநரின் உதவியோடு அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு வருகிறார்கள். அவரை பரிசோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் மகனின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஜாகர்த்தாவில் இருக்கும் சுசானாவின் கணவர் வெங்கட் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உடல் கூறாய்வு செய்யப்பட்ட மகனின் உடலை பெற்று இறுதிச் சடங்குகளை செய்திருக்கிறார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com