
சமீபத்தில் குஜராத்தில் நிகழ்ந்த படகு விபத்தையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் வதோதரா பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 30 பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை சுற்றுலா சென்றனர். மாணவா்களும், ஆசிரியா்களும் ஒரே படகில் பயணித்து ஏரியை சுற்றிப் பாா்த்தனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்தவா்கள் ஏரியில் விழுந்து தத்தளித்தனா். அவா்களின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தில் 12 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் பலியாகினர். 18 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மீட்கப்பட்டனர்.
அதையடுத்து இந்த விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்தையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், “படகில் பயணித்த குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மிதவை ஆடைகள் கூட வழங்கப்படவில்லை.
சிறிதும் பொறுப்பற்று இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனவரி 29ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அதற்குள்ளாக இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் குஜராத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த மோர்பி தொங்குபால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.