உத்திர பிரதேசத்தில் மொபைலில் கார்ட்டூன்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது 5 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் காமினி என்ற 5 வயது சிறுமி தனது தாயின் அருகே படுத்திருந்தவாறே மொபைல் போனில் கார்ட்டூன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி திடீரென மயக்கமடைந்தாள். உடனே அச்சிறுமி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஹசன்பூர் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் கூறுகையில், ‘‘மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம் என்றார். அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங் மேலும் கூறுகையில், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.
கடந்த இரண்டு மாதங்களில் அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் "மாரடைப்பு" காரணமாக இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மூத்த மருத்துவர் ராகுல் பிஷ்னோய் கூறுகையில், குளிர் காலநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது பொதுவானதாக இருக்கலாம். ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பொதுவாக குறைந்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.