சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: ராமரின் ஒளியிலிருந்து உலகிலுள்ள அனைத்து பக்தர்களும் ஆற்றலைப் பெறுகின்றனர். இந்த மங்களகரமான நாளில் என்னுடைய தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய மக்களின் இல்லங்களில் சோலார் மேற்கூரைகள் நிறுவப்பட வேண்டும். அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் மேற்கொண்ட முதல் முடிவு இதுதான். எனது அரசு பிரதம மந்திரி சூர்யோதயா திட்டத்தை தொடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தினால் மின் கட்டணம் குறைவதோடு, இந்தியாவை ஆற்றலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற உதவும் எனப் பதிவிட்டுள்ளார்.