மியான்மரின் ராணுவ விமானம் ஒன்று மிசோரம் மாநிலம் லெங்புய் விமான நிலையம் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்து படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு, லெங்க்புய் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராணுவ விமானத்தில் விமானிகளுடன் சேர்த்து மொத்தம் 14 பேர் பயணம் செய்ததாக மிசோரம் மாநில காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியிருக்கிறது. விமானத்தில் பயணித்த மற்றவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.