காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மீது வழக்கு தொடர காவல்துறைக்கு பரிந்துரைத்திருப்பதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். ராகுல், பொதுமக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில், 'பொதுமக்களை தன் பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன்' என காங்கிரஸ் இளைஞரணித் தலைவரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பதிவிட்ட காணொலியில் காங்கிரஸ் ஆதரவாளர்கள், சாலை இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்துவதும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது 'நக்ஸலைட்களின் தந்திரம்' என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்!
'இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது. உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் குவஹாட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதி, திடீரென மறுக்கப்பட்ட நிலையில், அவர் பேருந்தின் மீது ஏறி தனது உரையை ஆரம்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சாலை இரும்புத் தடுப்புகள் சேதமாயின. அதன்பின் கட்சி ஆதரவாளர்களை சந்தித்துப் பேசிய ராகுல்காந்தி, 'நாம் சாலை இரும்புத் தடுப்புகளை மீறிவிட்டோம். ஆனால் சட்டத்தை மீறக்கூடாது' எனக் கூறியுள்ளார்.
நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட இரண்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.