ஞானவாபி மசூதி வளாகத்தில் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையை இரு தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு கோயில் இருந்ததாக சில ஹிந்து இயக்கங்கள் கூறி வருகின்றன.
இதையும் படிக்க | பாலஸ்தீனர்களுக்கு பதிலாக இந்தியர்களை பணியமர்த்தும் இஸ்ரேல்!
எனவே ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா என்பதைக் கண்டறிய, ஒட்டுமொத்த மசூதி வளாகத்திலும் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சிலா் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதி வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2023 ஜூலையில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வறிக்கையைச் சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் 6 முறை கால நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, ஆய்வறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை கடந்த 2023 டிசம்பா் 18-ஆம் தேதி சமா்ப்பித்தது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கையை வழங்கவேண்டும். ஆனால் பொதுவில் இதனை வெளியிடக்கூடாது என்று வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை!: அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!
ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்திருப்போம் பொதுவெளியில் வெளியிடமாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இரு தரப்பினரும் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவிட்டுள்ளார்.