புது தில்லி: தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அரவிந்த கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் ஆளுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த கேஜரிவால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், 21 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும் ரூ.25 கோடி வரை அவர்கள் கட்சியிலிருந்து விலகத் தருவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களும் பாஜகவின் கோரிக்கையை மறுத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக தில்லியில் தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் அவையெல்லாம் தோல்வியில் முடிவதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மதுபான வழக்கில் தன்னை கைதுசெய்யும் திட்டமும் இந்த முயற்சியின் பகுதிதான் என அவர் சுட்டியுள்ளார்/
இதனை மறுத்த தில்லி பாஜக செயலர் ஹரிஸ் குரானா, ஆம் ஆத்மி யாரிடமெல்லாம் பேரம் பேசப்பட்டது என்பதையும் யார் பாஜகவில் இருந்து பேசினார்கள் என்கிற விபரத்தையும் வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!
மேலும், அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை விசாரணையின் மீதான கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.