ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் சுமூகமாக நடைபெறுவதை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உறுதி செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: முதல் முறையாக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டபோது எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றது. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை குறிவைத்து அண்டை மாநிலங்களில் பிரச்னைகளை உருவாக்கி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்கள் இந்தப் பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டு வருகிறோம். மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொள்ளப்படும்போது எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் மீது நீங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருப்பவர் என எனக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிப்பட்ட முறையில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.