பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். பிகார் முதல்வர் பச்சோந்திகளுக்கே கடும் போட்டியாக நிறம் மாறுகிறார் என விமர்சித்துள்ளார்.
'இந்த அரசியல் நாடகமெல்லாம் மக்கள் கவனத்தை காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணத்திலிருந்து திசை திருப்ப செய்யப்படும் முயற்சி' என அவர் தெரிவித்துள்ளார்.
'காங்கிரஸின் நடைப்பயணத்தைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகிறது' என தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் நடைபயணம் இன்னும் சில தினங்களில் பிகாருக்குள் நுழையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
'அரசியல் கூட்டணிகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் நிதீஷ் குமார், பச்சோந்திகளுக்கே கடும் போட்டியாக நிறம் மாறுகிறார்' எனக் கூறினார். பிகார் மக்கள் நிதீஷ் குமாரின் துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார். இன்று மாலை பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.