மகாராஷ்டிரம் சங்க்லி மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் 8 ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் சிறு சிறு விசயங்களுக்காக அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வர்கள் எனவும், இரண்டு நாள்களுக்கு முன்னர் இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த திங்கள் கிழமை தனது பையில் சிறிய கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் ஒன்றுடன் அந்த மாணவன் பள்ளிக்கு வந்துள்ளார். மாலை 5. 30 மணியளவில் இன்னொரு மாணவனை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிக்க: பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!
பாதிக்கப்பட்ட மாணவனின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவரை பள்ளி நிர்வாகம் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவருக்கு தையல்கள் போடப்பட்டுள்ளன என காவல் ஆய்வாளர் சஞ்சய் மோர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கொலை முயற்சி குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்திய சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.