மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது மத்திய அமலாக்கத்துறை.
முந்தைய நான்கு சம்மன்களையும் அரவிந்த கேஜரிவால் தவிர்த்த நிலையில், இந்த புதிய சம்மன் பிப்.2 ஆம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது.
அந்த தேதிகளில் தில்லி முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தார்.
வருகிற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கோவாவில் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்க அவர் சென்றதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
இதையும் படிக்க: ஹேமந்த் சோரனிடம் விசாரணை தொடக்கம்: ஜார்கண்டில் போலீஸ் குவிப்பு
மேலும், தனது தரப்பில் அனுப்பிய பதில் மனுக்களை அமலாக்கத்துறை பொருட்படுத்தவில்லை என்றும் அதற்கு பதிலாக புதிய சம்மன்களைப் பிறப்பிப்பதாகவும் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார்.