
2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ஏராளமான கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சுற்றுலா விசாக்கள் காலாவதியான போதிலும் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் சென்ற கேரளத்தைச் சேர்ந்த சுமார் 750 பேர் இன்னும் நாடு திரும்பவில்லை. அவர்களில் பாதி பேர் அந்தந்த நாடுகளில் உள்ள சைபர் கிரைம் கும்பல்களில் சேர்ந்திருக்கலாம்.
கேரளத்தை குறிவைத்து ஐந்து நாடுகளில் இருந்து சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளன. காவல்துறையின் சைபர் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய ஏஜென்சிகள் சுற்றுலா விசாவில் அங்கு சென்றவர்கள் மற்றும் நாடு திரும்பாதவர்களின் விவரத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மாநில காவல்துறைத் தலைவர், உத்தரவில், காணாமல் போனவர்களின் இருப்பிடத்தை சரிபார்க்க மாவட்ட காவல்துறைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்களில் சிலரின் விசா காலாவதியான பிறகு தங்கள் உறவினர்களுடன் வசிக்கலாம். சிலர் வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம். காணாமல் போனவர்களில் குறைந்தது 50% பேர் சைபர் குற்றங்களை செய்யக்கூடிய கும்பலில் சேர்ந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். கிரிமினல் கும்பலுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என்றனர்.
கடந்த 18 மாதங்களில் லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவில் இருந்து சைபர் குற்ற மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 120 கேரளத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் கால் சென்டர்களில் பணிபுரிந்து வந்துள்ளனர். சமூக ஊடகங்களில் இருந்து பயனாளர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை மோசடி திட்டங்களில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.