
புது தில்லியில், ஈசல் போல செயல்பட்டுவரும் ஐஏஎஸ் பயிற்சி மையங்களின் மோசமான செயல்பாடுகள், மூன்று இளம் உயிர்களை இழந்தபிறகே கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஐஏஎஸ் பயிற்சி மையங்களின் நூலகங்கள் மட்டும், அடித்தளத்தில் இயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் ஒன்றுதான் பணம்.
ஐஏஎஸ் பயிற்சி மையங்கள், செலவினத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அடித்தளத்துக்கான வாடகை குறைவு மற்றும் அதற்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமும் குறைவு என்பதே பயிற்சி மையங்கள் போட்ட கணக்கு.
தில்லியின், பழைய ரஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூன்று இளம் மாணவர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான், பல ஐஏஎஸ் கட்டடங்களுக்கு சீல் வைத்து மாநகராட்சி தற்போது துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவத்துக்குப் பிறகு மக்களின் கேள்வியாக எழுவது ஏன் அடித்தளத்தில் நூலகங்கள் உள்ளன?
ஒரு பயிற்சி மையக் கட்டடத்தின் மேல் தளங்களில் வகுப்புகள் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான கட்டடங்களில் அடித்தளத்தில்தான் நூலகங்கள் உள்ளன. அதாவது, மாணவர்களிடம் பயிற்சி வகுப்புகளுக்கு அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், அதிக வாடகை கொடுத்து மேல்தளங்களில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. நூலகங்கள், மாணவர்கள் படிக்க பயன்படுத்தும் இடம், சில ஏழை மாணவர்கள், இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாது, ஆனால், நூலகங்களுக்குத் தனியே கட்டணம் செலுத்தில் புத்தகத்தை படிக்க முடியும். எனவே, அவர்கள் பயிற்சி மையங்களின் நூலகங்களுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் பதிவு செய்துகொண்டு நூலகத்தை மட்டும் பயன்படுத்துவார்கள். நூலகத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள்தான், அவர்களுக்கு படிக்க ஒரு அமைதியான இடமாகவும் அது அமையும்.
ஒரு கட்டடத்தின் முதல் தளத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படும். ஆனால், அதேக் கட்டடத்தின் அடித்தளத்துக்கு வாடகை ரூ.20 ஆயிரமாகத்தான் இருக்கும்.
எனவே, நூலகங்கள் அடித்தளத்தில் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக மட்டும் கட்டணம் செலுத்துபவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். அதில்லாமல், முதல் தளத்தில் நூலகங்களை அமைத்தால், அதற்கு அதிக வாடகை செலுத்த வேண்டும், அப்போது நூலகங்களுக்கு அதிக கட்டணங்களையும் வசூலிக்க வேண்டும். ஆனால், ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் இருக்கும் பகுதியில், குறைந்த கட்டண நூலகத்துக்குத்தான் அதிகம்பேர் சேர்வார்கள் என்பதால், தொன்றுதொட்டு இவ்வாறு நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமாம். இதில், ஏழை மாணவர்கள் பலரும் சேர்ந்து படிக்கக் காரணம், தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் உட்கார்ந்து படிக்க இடமிருக்காது, எனவே பெரும்பாலான ஏழை இளைஞர்கள் நூலகங்களில் சேர்ந்துவிடுகிறார்கள்.
மேலும், பல அடித்தள நூலகங்களில், ஒருவர் மட்டுமே ஒரு நேரத்தில் சென்று வரும் வகையில் படிகட்டுகள் இருக்கும். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அதில் இருப்பார்கள். ஏதேனும் அவசர காலம் என்றால் எத்தனை பேரைக் காப்பற்ற முடியும் என்று தெரியவில்லை. எல்லோரும் இறந்துதான் போக வேண்டும் என்கிறார் இவ்வாறு ஒரு நூலகத்தில் படித்து வரும் இளைஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.