
கேரள அரசின்மீது அமித் ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு கேரள முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, கேரளத்தில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறியிருந்தார்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும், கேரள அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் கூறியதாவது, ``இந்திய வானிலை மையம் அறிவித்த மழையின் அளவைவிட அதிகன மழையே பெய்தது. அதுமட்டுமின்றி, பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, காலை 6 மணியளவில்தான் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.
முண்டக்கை கிராமத்திலிருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அந்தப் பகுதிகளில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே தற்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.