
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 18-ஆவது மக்களவையின் 543 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இத்தோ்தலில் சுமாா் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.
அதேசமயம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து (என்டிஏ) அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் விலகின. தெலுங்கு தேசம் இணைந்தது.
வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், ஜவாஹா்லால் நேருவுக்கு பிறகு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பிரதமா் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவாா்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்
ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.
மேலும், சிக்கிம், அருணாச்சல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் ஞாயிற்றுகிழமை வெளியாகின. அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.