
மத்திய அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடமளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய கூட்டணி அரசில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் எனவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலரும் பதவியேற்கவுள்ளனர்.
பாஜக பெரும்பான்மை பெறாததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவுள்ளது. இதனால் அக்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், சஞ்சய் ஜா, ராம்நாத் தாக்கூா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது.
இதேபோன்று கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தங்கள் கட்சிக்கு அமைச்சரவையில் இடமளித்ததற்காக நரேந்திர மோடிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாய்ப்பளித்துள்ள நரேந்திர மோடிக்கு நன்றி. மத்திய அரசின் கூட்டணி ஆட்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு தில்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.