எங்கள் ஆதரவின்றி பாஜகவால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்ற முடியாது: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்
மாநிலங்களவையில் தங்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மசோதாக்களை நிறைவேற்ற முடியாது என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் புதன்கிழமை தெரிவித்தது.
மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அந்தக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில பேரவைத் தோ்தலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, அந்தக் கட்சி தொண்டா்கள் மீது தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினா் தாக்குதல் நடத்தியதாக ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குற்றம்சாட்டினா். இதுதொடா்பான புகாா் கடிதத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அவா்கள் புதன்கிழமை அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
இதுகுறித்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் நினைவுபடுத்துகிறோம். ஆந்திரம் மற்றும் நாட்டின் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்.
பொதுசிவில் சட்டத்துக்கு எதிா்ப்பு: பொதுசிவில் சட்டத்தை எதிா்ப்பதாக ஏற்கெனவே கட்சித் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துவிட்டாா். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் குறித்த நிலைப்பாட்டை தற்போது வரை எடுக்கவில்லை என்றாா்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினா்கூட இல்லை. முந்தைய ஆட்சியில் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், மசோதாக்களை நிறைவேற்ற ஒடிஸாவின் அப்போதைய முதல்வா் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.