
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், தனது கணவரின் ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததையடுத்து கடுமையாக சாடினார். தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவாலை மிகவும் தேடப்படும் பயங்கரவாதி போல அமலாக்கத்துறை நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தெற்கு தில்லியின் போகலில் பேசிய சுனிதா கேஜரிவால்,“ ஹரியாணாவிலிருந்து கூடுதல் தண்ணீரைப் பெறுவதற்கான எனது கோரிக்கையை வலியுறுத்தி தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். நாட்டில் சர்வாதிகாரம் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது. நேற்றுதான் உங்கள் முதல்வருக்கு ஜாமீன் கிடைத்தது.
இந்தியாவில் ‘மிகவும் தேடப்படும் பயங்கரவாதி’ போல கேஜரிவால் நடத்தப்படுகிறார். அமலாக்கத்துறை யாருக்கும் சுதந்திரம் கொடுக்க விரும்பவில்லை. முதல்வருக்கு எதிராக ஜாமீன் தடை கோரி உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வரவில்லை. உயர்நீதிமன்றம் நீதி வழங்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
கலால் ஊழல் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை இயக்குனரகம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை, முதல்வருக்கு வழங்கிய ஜாமீனை தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
நீதிபதிகள் சுதிர் குமார் மற்றும் ரவிந்தர் துடேஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்த்து அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.