புணே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு ஜாமீன்

குடிபோதையில் புணே சொகுசு கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்
புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் குடிபோதையில் சொகுசு காரை இயக்கியதில் 2 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் சிறுவனை ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 19ஆம் தேதி, புணே, கல்யாணி நகரில் சொகுசு காரை வேகமாக இயக்கி, தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த 17 வயது சிறுவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான விஷால் அகர்வால் மகனான இந்த சிறுவன், விபத்தை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே, 300 வார்த்தையில் கட்டுரை எழுத வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தார்.

விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, சிறுவன் மதுபானக் கூடத்தில் மது அருந்திய விடியோக்களை காவல்துறையினர் சேகரித்திருந்தனர். இதில், சிறுவனை, வாகனத்தை இயக்க அனுமதித்ததாக, அவரது தந்தை விஷால் அகர்வாலும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

முன்னதாக, சிறாரின் உறவினர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், சிறார் குற்றவாளிக்கு பிணை கிடைத்தும் கூட, அதனை மறுத்து, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது ஏன்? என்று காவல்துறையினருக்கு நீதிமன்றம் கேள்வி கடந்த வாரம் எழுப்பியிருந்த நிலையில், இன்று ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம், சிறாரின் உறவினர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில், விபத்தை ஏற்படுத்திய சிறார், சட்டத்துக்கு விரோதமாக அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிளஸ்2 தேர்ச்சி பெற்றதற்காக, நண்பர்களுக்கு மது விருந்தளித்துவிட்டு, மதுபோதையில், குறுகிய சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த சிறுவன் காரை இயக்கியிருக்கிறார் என்கிறது முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை அகர்வால் கைது செய்யப்பட்டார்.

சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையும் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டார். மருத்துவமனையில் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்துக்காக சிறுவனின் தாயும், விபத்தை தான் ஏற்படுத்தியதாக, சரணடையுமானு கார் ஓட்டுநரை வலியுறுத்திய சிறுவனின் தாத்தாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com