மக்களவையில் செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி எம்பி கடிதத்துக்கு பாஜக பதில்

மக்களவையில் செங்கோலை எடுத்துவிட்டு அரசமைப்புப் புத்தகத்தை வைக்குமாறு சமாஜ்வாதி எம்பி கடிதம்
மக்களவையில் செங்கோல்
மக்களவையில் செங்கோல்
Published on
Updated on
1 min read

மக்களவையில் இடம்பெற்றிருக்கும் செங்கோலை அகற்றிவிட்டு அங்கு அரசமைப்புப் புத்தகத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சௌத்ரி எழுதிய கடிதத்துக்கு பாஜக பதிலளித்துள்ளது.

மக்களவையின் தற்காலிக அவைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு எழுதிய கடிதத்தில், செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம், ஜனநாயக இந்தியாவின் மக்களவையில் செங்கோல் இடம்பெறக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தான் அவ்வாறு கூறுவதற்கான காரணத்தையும் சௌத்ரி தெரிவித்துள்ளார். அதாவது, செங்கோல் என்பது ராஜ முத்திரை. இது ராஜாக்கள் வைத்திருக்கும் கோள். மன்னராட்சி முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், தற்போது நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறதா? அல்லது அரசமைப்பின்படி ஆட்சி நடைபெறுகிறதா? எனவே, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோல் அகற்றப்பட்டு, அரசமைப்புப் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா அன்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு அது மக்களவையில் வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து ஆட்சி மாற்றம் நடந்தபோது, முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சௌத்ரியின் இந்த கடிதத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மற்றும் தமிழக கலாசாரத்தை சமாஜ்வாதி எம்.பி. அவமதித்துவிட்டதாகவும், செங்கோல் மன்னாட்சியின் அடையாளம் என்றால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நேரு, ஏன் அதனைப் பெற்றுக்கொண்டார்? மன்னாட்சியின் அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமா? என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஹ்சத் பூனாவாலா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ராம் விலாஸ் பாஸ்வான் அணியைச் சேர்ந்த எம்.பி. சிராக் பாஸ்வான் பேசுகையில், வரலாற்றுச் சின்னங்களை, மோசமாக சித்தரிப்பதில், காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும் எப்போதும் முன்னிலையில் உள்ளன என்று விமரிசித்துள்ளார்.

இவர்கள் எப்போதும் நேர்மறையான அரசியலை செய்ய மாட்டார்கள், பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் கொடுத்திருக்கிறார், அதாவது, பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றுக்கொண்டதும், மக்களவையில் அரசமைப்புப் புத்தகத்துக்குத்தானே வணக்கம் செலுத்தினால், செங்கோலுக்கு வணக்கம் செலுத்தவில்லை என்பதைத்தான் சௌத்ரி விளக்கியிருக்கிறார்.

எங்கள் எம்.பி. இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்றால், மக்களவையில் செங்கோல் நிறுவப்பட்டபோது, பிரதமர் அதனை வணங்கினார். ஆனால், பதவியேற்றபோது அதனை மறந்துவிட்டார், எப்படி பிரதமர் அதனை வணங்க மறந்துவிட்டாரோ, அப்போதே அவர் வேறு ஒன்று தேவைப்படுவதாகக் கருதுகிறார் என்றுதான் சௌத்ரி கூறியுள்ளார் என்று அகிலேஷ் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com