
நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறியதாவது,
நீட் விவகாரம் இன்றைய நாளின் மிக முக்கியமான பிரச்னையாகும். எனவே அதை முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீட் விவகாரம் நாட்டின் இளைஞர்களைப் பற்றியது. மேலும் இது மிக முக்கியமான பிரச்னையாக "இந்தியா" கூட்டணி நினைக்கிறது. மாணவர்களின் நிலைமையை எழுப்புவதில் அரசும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இருக்கிறது என்ற செய்தியை நாடாளுமன்றம் மூலம் இளைஞர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இளைஞர்கள் தொடர்பான நீட் விவகாரத்தைக் குறித்து நாடாளுமன்றத்தில் மரியாதையான, நல்ல விவாதத்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்.
நீட் இளங்கலை நுழைவுத்தேர்வு மே 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. இதில் சுமார் 24 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். ஜூன் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் பிகார் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து, நாடு முழுவதும் நீட் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித்தேர்வு (யுஜிசி-நெட்) மற்றும் நீட் முதுகலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.