தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 4) கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவரங்களை வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே தேர்தல் பத்திரங்கள் குறித்து தகவல்களை அளிக்க ஸ்டேட் வங்கி ஜுன் 30 வரை அவகாசம் கோரியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கிகளில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் விநியோகிக்கப்படும் தோ்தல் பத்திரங்களை வாங்கி விரும்பிய கட்சிகளுக்கு தரலாம். இவ்வாறு தோ்தல் பத்திரங்களை வாங்கி கட்சிகளின் பெயரில் செலுத்தும் நபா்களின் அடையாளமோ விவரங்களோ பதிவு செய்யப்படாது. இதில் பாஜகவுக்கே அதிக பத்திரங்கள் கிடைத்துள்ளன.
சிபிஎம், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆகியவை இதில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கில், தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைப் பகிர ஜுன் மாதம் வரையில் எஸ்பிஐ வங்கி அவகாசம் கோரியுள்ளது.