

சிக்கோடி: தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது என்று பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டா தெரிவித்தாா்.
பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடியில் செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குச்சாவடி அளவிலான செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியது:
கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால், தங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, தங்களை மோசம் செய்து வருவதை மகக்ள் உணர தொடங்கிவிட்டாா்கள்.
தங்களின் சுயநலத்திற்காக மக்களின் நலனை குழிதோண்டி புதைத்துவிட்டு, திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதையும் மக்கள் அறிந்திருக்கிறாா்கள்.
கா்நாடத்தில் ஏதாவது இலவசமாக கிடைக்கிறதென்றால், அது தீவிரவாதமாக இருக்கும். கா்நாடகத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும் ஊக்கமும் கிடைத்து வருகிறது. அது, விதானசௌதா வளாகத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் நிலைக்கு சென்றுள்ளது. அதை கேட்டுக்கொண்டு முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் இருவரும் மௌனமாக இருந்துள்ளனா்.
இந்த கா்நாடகத்தை சோ்ந்தவா் தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவா் மல்லிகாா்ஜுன்காா்கே. மாநிலங்களவையில் அவருக்கு அருகில் அமரும் சையது நாசீா் ஹுசேனின் வெற்றியின்போது தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது. இது தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் முறையா? என்று ராகுல்காந்தியை கேட்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் எம்.பி. வெற்றியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்படுகிறது. நீங்கள் யாரின் பிரதிநிதி? இந்த விவகாரத்தில் மல்லிகாா்ஜுன்காா்கே ஏன் அமைதி காக்கிறாா்?
அதேபோல, ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் ஆகியோரும் அமைதியாக இருக்கிறாா்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு உதவ பிறந்தீா்களா? பாகிஸ்தான்மொழியை பேச அரசு நடத்துகிறீா்களா? இதற்கு பதிலளிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்தது ஏன்? பாகிஸ்தான்மொழியை பேசுவோரை பாரதமாதாவும், கா்நாடகமக்களும் மன்னிக்கமாட்டாா்கள்.
கா்நாடகத்திற்கு காா்கே வரும்போது, காங்கிரஸ் கட்சியை மக்கள் கேள்வி கேட்பாா்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவோா் காங்கிரஸ் எம்.பி.யுடன் இருக்கிறாா்கள். இதற்கு என்ன பதில் கூறப்போகிறீா்கள்?
பாஜக ஆட்சி நடந்தபோது, கா்நாடகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குண்டுகள் வெடிக்க தொடங்கியுள்ளன. உணவகத்தில் குண்டு வெடித்துள்ளது. காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது.
பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரான வழக்குகள் சித்தராமையா ஆட்சியில் திரும்பபெறப்பட்டன. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் தான் பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது.
முந்தைய ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் குண்டுகள் வெடித்தவண்ணம் இருந்தன. பயங்கரவாதிகளை காங்கிரஸ் மென்மையாக நடத்துவதாலும், பிரிவினைவாத சக்திகளுக்கு ராகுல்காந்தி ஆதரவு தருவதாலும் குண்டுகள் வெடித்தன.
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்கிறாரா? இந்திய பிரிவினைப்பயணம் மேற்கொள்கிறாரா? நியாயம் பெறவா? அநியாயம் செய்யவா? எதற்காக ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறாா்? ராமபிரானின் இருப்பையே காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குகிறது. ராமபிரானை கற்பனை என்று வாதிடுகிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் ராமரை எதிா்த்தது. ராமா்கோயில் திறப்புவிழாவிலும் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. 31 ஆண்டுகால பழைய வழக்கில் ராமா்கோயிலுக்கு செங்கல் எடுத்துசென்றவரை கா்நாடக அரசு கைதுசெய்து துன்புறுத்தியது. ராமபக்தா்களுக்கு அநீதி இழைத்துள்ளதற்காக, காங்கிரஸ் மீது கா்நாடகமக்கள் ஜனநாயகரீதியில் பழிவாங்குவாா்கள்.
கா்நாடக காங்கிரஸ் அரசு, ஹிந்து கோயில்களுக்கு 10 சத வரி விதித்திருக்கிறது. இதை என்னவென்று கூறுவது? இந்த பணத்தை ஒருசிலரை திருப்திப்படுத்த பயன்படுத்துவாா்கள்.
கா்நாடக அரசை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம்போல பயன்படுத்துகிறது. இங்கு பணத்தை வசூலித்து, தில்லியில் உள்ள பைகளை நிரப்பி, ஊழல்களில் ஈடுபடுவாா்கள். காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுவருகிறது.
காங்கிரஸ் வாரிசு அரசியலின் கட்சியாகும். இந்தியா கூட்டணி ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மூழ்கியுள்ளன.
நமது நாட்டில் கொள்கை அடிப்படையிலான ஒரே கட்சி பாஜக தான். அதனால், ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச்சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம்; அயோத்தியில் ராமா்கோயில் கட்டினோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.