கொல்கத்தா : ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஒதுக்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் வரும் வியாழக்கிழமை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தின் நாராயண்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 19) நடைபெற்ற பாஜகவின் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :
“திரிணமூல் காங்கிரஸ் தமது வாக்கு வங்கியைப் பற்றி மட்டுமே யோசிக்கிறது. ஊடுருவல்காரர்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறது. அது தவிர, வேறெவரைப் பற்றியும் அக்கட்சிக்கு எந்தவொரு அக்கறையும் இல்லை.
15 ஆண்டுகளில், கொள்ளையடிப்பதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறது திரிணமூல் காங்கிரஸ்.
3ஜி-இல் இருந்து 5ஜிக்கு இந்தியா நகர்ந்துவிட்டது; 24-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் வசதி விரிவாக்கப்பட்டது; உலகளவில் புத்தொழில் களஅமைப்பில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாற்றம் கண்டிருக்கிறது; நிலவின் தென் துருவத்தில் மூவர்ணக் கொடியை நிலைநாட்டியது. ஆனால், மேற்கு வங்கமோ மமதா பானர்ஜியின் அரசின்கீழ், ஊழல் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தாண்டி சிறிதளவிலேயே முன்னேற்றம் கண்டிருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் அரசு முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது பள்ளிப்படிப்பை தொடங்கிய ஒரு குழந்தை, இன்று மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறி வேலை தேடச் செல்ல வேண்டியிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தில்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் வாக்கு செலுத்த மட்டுமே இங்கு திரும்புவதைப் பார்க்க முடிகிறது.
இங்கு அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய வேலைகளைப் பங்கிட்டு ஊடுருவல்காரர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் வழங்கி வருகிறது. பாஜக இந்தக் கொள்ளையைத் தடுக்கும். இது மோடியின் உத்தரவாதம்!
இளையோரை வேலையில் அமர்த்துவதில், ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில், குழந்தைகளுக்கான மதிய உணவில், ஊரக வேலைவாய்ப்பில், ஏழைகளுக்கான நிதி வழங்குவதில், கிராமப்புற சாலை அமைப்பதில் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திலும்கூட கொள்ளை நடைபெறுகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், இதற்கு யார் பொறுப்போ அவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை பாயும். ஆயிரக்கணக்கான இளையோரின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் தப்பிக்க முடியாது.
கிராமப்பகுதிகள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த பெண்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்து முறைகேடுகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்று அஞ்சிய திரிணமூல் காங்கிரஸ் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்துள்ளது.
நாடாளுமன்றத்திலும் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை திரிணமூல் காங்கிரஸ் முடக்க பார்த்தது. வங்கப் பெண்களின் கனவுகளை அக்கட்சி நெரித்தது.
அரசியல் காரணங்களுக்காக மதம்சார் இடஒதுக்கீட்டை திரிணமூல் காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இடஒதுக்கீட்டை திரிணமூல் காங்கிரஸ் பறித்து அதனை முஸ்லிம்களுக்கு ஒப்படைக்க முயற்சிக்கிறது. அரசமைப்பின்படி இது தவறு. நீதிமன்றங்களின் அடிப்படையிலும் இது தவறு.
வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதிய ஆணையம் நடைமுறைப்படுத்தப்படும். 7-ஆவது ஊதிய ஆணையத்தின் பலன்களை நீங்கள் பெறுவீர்கள். வங்கத்தின் ஒவ்வொரு அரசு ஊழியரும் எங்களது கண்ணும் காதும் போன்றவர்களாவர்.
வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பாஜக அரசு ஊக்கத்தொகையும் பணி நியமன கடிதங்களையும் வழங்கும். இது மோடியின் உத்தரவாதம்!
‘விபி ஜி-ராம் ஜி’ திட்டம் இம்மாநிலத்தில் பாஜக அரசால் அமல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் 125 நாள்கள் வேலை உறுதி செய்யப்படும்.
இம்மாநிலத்தில் ‘நீலப் புரட்சியை’ ‘இரட்டை என்ஜின்’ அரசு ஏற்படுத்தும். மீன் உற்பத்தியில் வங்கத்தை தன்னிறைவான மாநிலமாக பாஜக மாற்றும்.
மீன் உற்பத்தி பாஜக அரசுகளின்கீழ், பிகாரில் இரட்டிப்பாகியுள்ளது; ஒடிஸாவில் 150 சதவீதத்துக்கும்மேல் உயர்ந்துள்ளது. அதேவேளையில், திரிணமூல் காங்கிரஸின் மோசமான கொள்கைகளால் வங்கம் பின்தங்கியுள்ளது.
என்னுடைய அரசியல் அனுபவத்தில் நான் சொல்வது யாதெனில், ‘இம்முறை வங்கத்தில் பாஜக அரசு அமைவது உறுதி. சில மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெல்லாது’” என்றார்.
Summary
"TMC snatching reservation of OBCs, trying to provide it to Muslims." - PM Modi in Medinipur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சீரழித்தவர் மமதா : பிரதமர் மோடி
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

