அசாமில் காசிரங்கா தேசிய பூங்காவைப் பார்வையிட்ட பிரதமர் மோடி அங்குள்ள யானைகளுக்குக் கரும்புகளைப் புகட்டியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்றார். அங்குப் பூங்காவைப் பார்வையிட்டு, பின்னர் யானை சவாரி செய்து பூங்காவில் உள்ள டஃப்லாங் டவரை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள மூன்று யானைகளுக்கு கரும்புகளையும் புகட்டினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
லக்கிமாயி, பிரத்யும்னா மற்றும் பூல்மாய் ஆகிய யானைகளுக்குக் கரும்புகளை புகட்டினேன். காசிரங்கா பூங்கா காண்டாமிருகங்களுக்குப் பெயர் பெற்றது. ஆனால் இங்குப் பல யானைகள் உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் சில முக்கிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி சுமார் இரண்டு மணி நேரம் பூங்காவில் செலவிட்டார். காசிரங்கா தேசிய பூங்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் வனக் காவலர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேசிய பூங்காவின் இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் யானை சவாரி சென்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை காசிரங்கா தேசிய பூங்காவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு அங்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.