வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தோ்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநிலத்தில் உள்ள பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.
மற்றொருபுறம் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பராடா மைதானத்தில் இன்று நடைபெற்ற மெகா பேரணியில் வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
அப்போது 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.
அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பெர்ஹாம்பூர் தொகுதியிலும், கிர்த்தி ஆசாத் பர்தமான்-துர்காபுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும் கிருஷ்ணாநகர் தொகுதி வேட்பாளராக மஹூவா மொய்த்ரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்கள் உள்பட 16 சிட்டிங் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.