

தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் இப்படிதான் இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில், 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அளித்த பேட்டியில், அணியின் செயல்பாடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து கடுமையாக விமர்த்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரைத் தலைவராக்கினால் என்ன செய்ய முடியும்? அணி எப்படி செயல்படும்?
உங்களால் சூப்பர் ஸ்டாராக உருவாக்கப்பட்ட ஒரு வீரரால் ஒரு ஆட்டத்தில்கூட வெல்ல முடியவில்லை. 10 ஓவர்கள்கூட கொடுக்க முடியாத ஒருவரை நட்சத்திர வீரராக்கியுள்ளீர்கள்.
உலகில் மிகப்பெரிய குற்றம் என்னவென்றால் திறமையற்ற ஒருவருக்கு மிகப்பெரிய வேலையைக் கொடுப்பதுதான். திறமையற்ற மற்றும் அறியாமை கொண்டவருக்கு பெரிய வேலை கொடுக்கப்பட்டால், எந்தவிதமான குழப்பமும் சேதமும் ஏற்படலாம்.
இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது, நாங்கள் புள்ளிப் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளோம். நமீபியாவை பாகிஸ்தானால் வெல்ல முடியும், சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதிபெறும். நான் பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரிப்பேன்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் குழப்பமான முடிவுகளை வெளிப்படையாக கடுமையாக விமர்சிப்பவராக முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.