மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 52 வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ளது. இதனை மற்ற கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருகிறது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட சமரசங்கள் தேவைப்படுகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும், எனினும் ஒருதலைபட்சமான அறிவிப்பை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், தில்லியில் செய்ததைப்போல நாம் அதை கூட்டாக இணைந்து செய்ய வேண்டும். திரிணமூல் காங்கிரஸுக்கு அவசரமாக வேட்பாளர்களை அறிவிக்கவேண்டிய அழுத்தம் என்ன? இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கமாக உள்ளது. மேற்கு வங்கத்திலும் அதையேதான் காங்கிரஸ் விரும்புகிறது. நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.