
பாரதிய ஜனதா கட்சி - ஜனநாயக ஜனதா் கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
கூட்டணி முறிவு மற்றும் மனோகர் லால் கட்டர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டம் என்ற செய்திகள் நேற்று முதலே வெளியாகிவந்த நிலையில், மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் இன்று மாநில ஆளுநரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 40 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். மாநிலத்தில் உள்ள 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.
சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல்வராக ஹரியாணா மாநில பாஜக தலைவரும், எம்பியுமான நயாப் சைனி பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனோகர் லால் கட்டரை கர்னல் மக்களவைத் தொகுதியில் களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
நயாப் சைனி யார்?
பாஜகவில் 1996-ல் இணைந்த நயாப் சைனி, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக 2010-ல் நாராயண்கர் தொகுதியில் போட்டியிட்டு மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2014-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில அமைச்சராக பதவி வகித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் குருக்ஷேத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நயாப் சைனி, கடந்தாண்டு ஹரியாணா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.