பாஜக - ஜனநாயக ஜனதா் கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
கூட்டணி முறிவு மற்றும் மனோகர் லால் கட்டர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டம் என்ற செய்திகள் நேற்று முதலே வெளியாகிவந்த நிலையில், மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் இன்று மாநில ஆளுநரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் ஹரியாணா மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக - ஜஜ கட்சியுடன் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி முறிந்தது.
மக்களவைத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், இதற்கு பாஜக மறுத்ததால், கூட்டணி முறிந்து, முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவை இன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது.
இந்த நிலையில், ஹரியாணா மாநில பாஜக தலைமை, மாநிலத்தில் உள்ள 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை கோரியிருப்பதாகவும், அவர்களது ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஹரியாணாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டு மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. பெரும்பான்மையைப் பெறாதநிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணியுடன் ஆட்சியமைத்தது. தற்போது பெரும்பான்மையை பெற ஆறு எம்எல்ஏக்களின் ஆதரவு போதும் என்பதால், 7 சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்ததும், மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தால் நயாப் சைனி முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுயேச்சைகளின் ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்போது, சுயேச்சைகளுக்கும் தங்களது அமைச்சரவையில் பதவி வழங்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ சுதீர் சிங்லா தெரிவித்துள்ளார்.