பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரிடம் விசாரணை

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரிடம் விசாரணை
Shailendra Bhojak

புது தில்லி: பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்திருக்கும் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் சபீர் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அந்த மா்ம நபா் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்த என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனா். மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com