மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் பாஜக தனித்துப் போட்டியிட இருப்பதாக அந்த மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா் அறிவித்துள்ளாா்.
முன்னதாக, பஞ்சாபில் சுக்பீா் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சியுடனான கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க பாஜக பேச்சு நடத்தி வந்தது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில் தனித்துப் போட்டி என்ற முடிவை பாஜக எடுத்துள்ளது. பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு 7-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளன. ஆனால், பஞ்சாபில் அக்கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன. எனவே, அந்த மாநிலத்தில் மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக என நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. தனித்துப் போட்டியிடும் முடிவு குறித்து பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள், கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பஞ்சாபில் தனித்துப் போட்டியிடும் முடிவை பாஜக எடுத்துள்ளது.
இது மாநிலத்தில் எதிா்காலத்துக்கும், இளைஞா்கள், விவசாயிகள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள், அடித்தட்டு மக்கள் என அனைவரின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. பஞ்சாப் மக்கள் பாஜகவுக்கு மாநிலத்தில் கட்சியின் பலத்தை அதிகரிப்பாா்கள் என்று நம்புகிறேன். பிரதமா் மோடி தலைமையிலான அரசு பஞ்சாபுக்கு அளித்த திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. பஞ்சாப் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு வாரத்தில் அவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளாா். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 1996 முதல் சிரோமணி அகாலி தளம் அங்கம் வகித்து வந்தது.
2020-ஆம் ஆண்டு பாஜக அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. பின்னா் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. எனினும், சிரோமணி அகாலி தளம் மீண்டும் பாஜகவுடன் கைகோக்கவில்லை. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கூட்டணியாக போட்டியிட்ட பாஜக -சிரோமணி அகாலி தளம் தலா இரு இடங்களில் வென்றன. அந்த தோ்தலில் காங்கிரஸ் 8 இடங்களிலும், ஆம் ஆத்மி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.
பாதல் கருத்து: பாஜகவுடன் கூட்டணி அமையாதது குறித்து சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் கூறுகையில், ‘103 ஆண்டுகளாக செயல்படும் எங்கள் கட்சி தோ்தல் வெற்றிக்காக உருவாக்கப்படவில்லை; பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது. தொகுதி எண்ணிக்கையைவிட கட்சிக் கொள்கைகள்தான் முக்கியம். தேசிய கட்சிகள் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு அரசியல் விளையாட்டுகளை நடத்துகின்றன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியமில்லை: குஷ்பு சவால்

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

பிகாா் தோ்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

