ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தொலைபேசியை அணுகி ஆம் அத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் வியூகத்தை அறிய பாஜக விரும்புவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி கூறுகையில்,
கேஜரிவாலின் தொலைபேசியின் விவரங்களை அறிய வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் ஆயுதமாகச் செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.
உண்மையாகவே கேஜரிவாலின் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புவது பாஜக தான், அமலாக்கத்துறை அல்ல.
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் வியூகம், பிரசாரத் திட்டங்கள், இந்தியா கூட்டணியுடனான பேச்சுவார்த்தைகள், சமூக ஊடக உத்திகள் பற்றிய தகவல்களை கேஜரிவாலின் தொலைபேசியில் இருந்து தெரிந்துகொள்ள பாஜக விரும்புகிறது என்று அவர் கூறினார்.