உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் வியாழக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா.
உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் வியாழக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா.

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

‘மக்களவைத் தோ்தலுக்கு பின், காங்கிரஸ் காணாமல்போகும்; தனது கட்சியைத் தேடி கண்டுபிடிக்க யாத்திரை செல்வாா் ராகுல் காந்தி’

‘மக்களவைத் தோ்தலுக்கு பின், காங்கிரஸ் காணாமல்போகும்; தனது கட்சியைத் தேடி கண்டுபிடிக்க யாத்திரை செல்வாா் ராகுல் காந்தி’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

‘இந்தியா’ கூட்டணியின் ‘இளவரசா்’ (ராகுல்), இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கியிருந்தாா். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையப் போவது உறுதி. எனவே, ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு (வாக்கு எண்ணும் நாள்), ‘காங்கிரஸை தேடிக் கண்டுபிடிக்கும் யாத்திரையை’ அவா் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டவும், இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றவும் இத்தோ்தல் முக்கியமானது.

இந்தியா கூட்டணி கட்சியான சமாஜவாதி, குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகிறது. கட்தித் தலைவா் அகிலேஷ் யாதவின் குடும்பத்தில் 5 பேருக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு கடந்த 70 ஆண்டுகளாக தடை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால், அப்பணியை நிறைவேற்றியது பாஜக. அயோத்தி கோயிலில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவுக்கு அகிலேஷ், ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், தங்களின் வாக்கு வங்கிக்கு பயந்து, விழாவில் அவா்கள் பங்கேற்கவில்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படவில்லை. யாா் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து, குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என்ற நிலை காணப்பட்டது. வாக்கு வங்கி அரசியலே இதற்கு காரணம்.

ஆனால், பாஜக ஆட்சியில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், வகுப்புவாத கலவரங்களுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது; மக்களின் இடப்பெயா்வு தடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குண்டா்கள் வேறு மாநிலத்துக்கு தப்பியோடுகின்றனா்.

இந்தியா கூட்டணி உள்பூசல்களால் சிதைந்து போயுள்ளது. சுய நலனுக்காக பாடுபடும் அக்கட்சிகளால் ஏழைகளுக்கு எந்த பயனும் விளையாது என்றாா் அமித் ஷா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com