ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிரிஜ் பூஷணுக்குப் பதில் அவரது மகன் இந்த முறை பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் இந்த முடிவை விமர்சித்துள்ள சாக்ஷி மாலிக், “இந்த நாட்டின் மகள்கள் தோற்றனர், பிரிஜ் பூஷண் வென்றுள்ளார். எங்களின் விளையாட்டு வாழ்க்கையை பணயம் வைத்து தெருக்களில் வெயிலிலும் மழையிலும் பல நாள்கள் உறங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை. நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை, நீதியை மட்டுமே கேட்கிறோம்” என எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக பிரபலமான மல்யுத்த வீராங்கனைகள் போராடியது குறிப்பிடத்தக்கது. அவர் மீது கடந்த ஜுன் மாதம் தில்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.