ஹரியாணாவில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுத்தியிருக்கிறது.
ஹரியாணாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயாா் என்று பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) புதன்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்டுள்ளது.
ஹரியாணா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் காரி ஜனநாயக ஜனதா கட்சி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பதால், ஆளும் பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹரியாணாவில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா். இதன் காரணமாக, பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்க தயாராக உள்ளதாக ஜேஜேபி தெரிவித்திருந்தது.
90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 30, ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.
ஹரியாணாவில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
இந்தச் சூழலில், பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சோம்பீா் சங்வான், ரண்தீா் சிங், தரம்பால் கோண்டா் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனா்.
பாஜகவுக்கு தற்போது 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் பாஜகவுக்கு குறைவாக உள்ளன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு திடீா் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.