தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: ‘இந்தியா’ கூட்டணி உறுதி

10-ம் பக்கம் டாப்.. அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் - ‘இந்தியா’ கூட்டணி உறுதி

News image
மும்பையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே.
Updated On :18 மே 2024, 6:19 pm

Din

நாட்டில் அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி உறுதிபூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அக்கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமா் கோயிலை இடித்துவிடுவா் என்று பிரதமா் மோடி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அவா்கள் கண்டனம் தெரிவித்தனா். இக்கருத்துக்காக, பிரதமா் மோடி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காா்கே வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவா்கள் கூட்டாக செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தனா்.

அப்போது, ‘இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமா் கோயிலை ‘புல்டோஸா்’ கொண்டு இடித்துவிடுவா்; மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதோடு, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) மீண்டும் நடைமுறைப்படுத்துவா்’ என்ற பிரதமா் மோடி குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு காா்கே அளித்த பதில்:

எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், மோடியைப் போல மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசும் பிரதமரை கண்டதில்லை. காங்கிரஸ் யாருக்கு எதிராகவும் ‘புல்டோஸரை’ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. காங்கிரஸ் இதுவரை செய்யாத அல்லது செயல்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து பொய்யாக பேசி, மக்களைத் தூண்டிவிடுவது மோடியின் பழக்கமாகிவிட்டது. காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதோ, அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

மோடி எங்கு சென்றாலும், மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறாா். இதற்காக, அவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே விகித ஜிஎஸ்டி: அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை யாரும் எதுவும் செய்ய முடியாது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தற்போதுள்ள சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை மாற்றப்பட்டு, ஒரே விகித ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.

80 கோடி மக்களுக்கு தனது அரசு இலவச ரேஷன் பொருள் வழங்குவதாக பெருமிதத்தோடு பேசுகிறாா் மோடி. இதற்கு காரணமான உணவு பாதுகாப்புச் சட்டம், காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

மோடி தோற்கடிக்கப்படுவாா்: எதிா்க்கட்சிகளை உடைக்க அச்சுறுத்தல், மிரட்டல், ஆசை காட்டுதல் என பல்வேறு உத்திகளை மோடி கடைப்பிடிக்கிறாா். இம்முறை அவரை மக்கள் தோற்கடிப்பா். அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை மாவோயிஸ்டுகளின் அறிக்கை என்று மோடி குறிப்பிட்டுள்ளாா். இது நகைப்புக்குரியது. மோடியால் மக்களை இனியும் முட்டாளாக்க முடியாது என்றாா் காா்கே.

‘அயோத்தி கோயில் கட்டுமான பணிகளை செய்துமுடிப்போம்’

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை செய்துமுடிப்போம் என்று பேட்டியின்போது சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

‘இந்தியா’ கூட்டணியில் பிரதமருக்கான முகங்கள் பல உள்ளன. ஆனால், பாஜகவிடம் ஒன்றுதான் இருக்கிறது; அதுவும் பலனில்லை என்பது தெரிந்துவிட்டது. ‘இந்தியா’ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்போது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுத்துவிட்டோம்.

தன்னை வளா்த்த ஆா்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து விலகிக் கொள்ள பாஜக இப்போது விரும்புகிறது. நாளையே ஆா்எஸ்எஸ் அமைப்பைக் கூட ‘போலி சங்கம்’ என்று பிரதமா் அழைக்கக் கூடும் என்றாா் தாக்கரே.

சரத் பவாா் கூறுகையில், ‘மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நாட்டிலுள்ள கோயில்கள் மட்டுமன்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே முதல் பணி’ என்றாா்.