
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டைபறிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றும், இடஒதுக்கீட்டை தாண்டி காங்கிரஸ் கட்சியால் யோசிக்க முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்க்பூம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், வளர்ச்சி என்றால் என்ன என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு எதுவும் தெரியாது. பகிர்ந்து அளிக்கிறேன் என்ற பெயரில் ஏழை மக்களின் வளத்தை கொள்ளையடிப்பது மட்டுமே அவ்விரு கட்சிகளுக்கும் தெரியும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை பறிக்க வேண்டும் என்பதே அவர்களின் (இந்தியா கூட்டணி) நோக்கம். அதனைத் தாண்டி அவர்களால் யோசிக்க முடியுமா? அவர்களின் உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சி மாநிலத்தில் நடக்கிறது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஊழல்களின் தாய் காங்கிரஸ். ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் துரதிருஷ்டவசமாக கட்டுக்கட்டான பணம் மட்டுமே நினைவுக்கு வருகிறது. (ஜார்கண்ட் அமைச்சரின் செயலாளர் வீட்டு பணியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது.)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஏழைப் பழங்குடியின மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் வீட்டில் மலையளவு கைப்பற்றப்பட்ட பணம் மக்களுக்கு சொந்தமானது. அவர்கள் திருடிய பணத்தை ஏழைகளின் கைகளில் சேர்ப்பேன். சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் என்ற பெயரில் அதனை அரசு கருவூலத்தில் சேர்க்கமாட்டேன். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். இது மோடியில் வாக்குறுதி எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.