
ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தபோது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, செங்கல் சூளையில் உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காலு லால் மற்றும் அவரது சகோதரர் கன்ஹா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த போக்சோ நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்தது என்ன?
பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டைவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் தேடத் தொடங்கினர்.
இதனிடையே கிராமத்தில் உள்ள குளத்தில் ஆகஸ்ட் 4-ஆம் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் செங்கல் சூளையில் வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
பிறகு தடயங்களை அழிப்பதற்காக சிறுமியின் உடலை குளத்தில் வீசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணையில் பெண்கள் உள்பட 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், காலு லால் மற்றும் அவரது சகோதரர் கன்ஹா ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்த நீதிமன்றம், 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் மஹாவீர் சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.