புணேவில் மதுபோதையில் கார் ஓட்டிய சிறுவன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புணே கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பைக் மீது சொகுசு கார் மோதியதில், ஐ.டி. ஊழியர்கள் அனிஸ் அவதியா(24) மற்றும் அஷ்வினி கோஸ்டா(24) ஆகியோர் உயிரிழந்தனர்.
காவல்துறை விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்துக்கு முன்னதாக சனிக்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து 12 மணிவரை ஒரு பாரிலும், நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிவரை மற்றொரு பாரிலும் சிறுவன் மது அருந்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது.
சாலை விபத்து குறித்து 300 பக்க கட்டுரை, சிறுவருக்கு ஆலோசனை என மிக எளிய நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கைதான சிறுவனுக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக பிரியாணி, பர்கர், பீசா என வகைவகையான உணவுகளை காவல்துறையினர் வாங்கிக் கொடுத்த விடியோக்களும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஊடகவியலாளர் செளரப் கோரட்கர் கடும் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “இது விபத்து அல்ல. ஊழல் செய்யும் காவல்துறை, நிர்வாகம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பதிவு செய்யாத காரை வழங்கிய கார் கம்பெனி உள்ளிட்டோர் செய்த கொலை.
சரியான நேரத்தில் பார்கள் மூடியிருந்தால், விதிப்படி சிறுவனுக்கு மது வழங்காமல் இருந்திருந்தால், பெற்றோர்கள் கார் வழங்காமல் இருந்திருந்தால், போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இருவர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
தலைக்கவசம் அணியவில்லை என்றாலும், ஓட்டுநர் உரிமம் இல்லையென்றாலும் உடனடியாக அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை ஏன் பதிவு எண் இல்லாத கார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இரண்டு குடும்பங்களை அழித்தவருக்கு காவல்துறையினர் வகைவகையான உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கிறது.
பள்ளிகளில் தவறு செய்யும் சிறுவர்களுக்குகூட இதைவிட கடும் தண்டனைகள் வழங்கப்படும்.
உரிமம் இல்லாமல் ஓட்டியதற்கு 3 மாதம் சிறை, 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டியதற்கு 3 மாதம் சிறை, மது அருந்தி ஓட்டியதற்கு 6 மாதம் சிறை, அதிவேகமாக இயக்கியதற்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கும் நீதிமன்றம், இருவரை கொன்றவருக்கு 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது.
இவற்றையெல்லாம்விட குற்றத்தை மறைக்க எம்எல்ஏ சுனில் டிங்ரே, சாட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. உண்மையென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது, “காவல்துறை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் குற்றவாளியை காப்பாற்ற நினைக்கிறார். இருவரை கொன்றவருக்கு 2 மணிநேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. காணொளியில் அவர் போதையில் இருப்பது தெரிகிறது, ஆனால் பரிசோதனையில் எதிர்மறையாக உள்ளது. குற்றவாளிகளை யார் காப்பாற்றுகிறார்கள்? காவல் ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அல்லது புணே மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், 48 மணி நேரத்துக்கு பிறகு சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வால், இரு பார்களின் உரிமையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞன் சாவில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்!!

மது வாங்க வாகனம் தர மறுத்த நபரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த வைத்த சிறுவன் கைது
நரேலா: பிறந்த நாளில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை - நண்பன் கைது

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



