![பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: சசி தரூர்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2024%2F2%2F8%2Foriginal%2FShashi_Tharoor__EPS.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங்கை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது :
நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். அதனால்தான் நான் சரண்ஜித் சிங்கிற்கு வாக்களிக்க சொல்கிறேன்.
ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பாஜக பிளவுப்படுத்த பார்க்கிறது. ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் பாஜாவினரால் பிரிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை பாஜக அவமதிக்கிறது.
பாஜக எந்தவொரு ஜனநாயக அமைப்பையும் விட்டு வைக்காது. நடுநிலையோடு இருக்கும் அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுத்து தன் பக்கம் இழுக்கும்.
ஊடகங்கள் அரசுக்கு எதிராக பேசினால் மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளிப்படையாக பேச முடியாத சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஏழாவது மற்றும் இறுதி கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது