மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை மாற்றுவார்கள்: இந்தியா கூட்டணியினர் மீது மோடி தாக்கு
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க 'இந்தியா' கூட்டணி கட்சியினர் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்றும், அவர்கள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சலின் கோசியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
”எதிர்க்கட்சிகள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வழங்குவார்கள்.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
'இந்தியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதியும், காங்கிரஸும் பல ஆண்டுகளாக பூர்வாஞ்சலை புறக்கணித்துவிட்டு, அதை வறுமையான உதவியற்ற பகுதியாக மாற்றிவிட்டனர். சட்டம் ஒழுங்கும் சமாஜ்வாதியும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை.
'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புவாதிகளாக இனவெறியை நேசிப்பவர்களாக உள்ளனர். பல்வேறு சாதியினரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்குகிறார்கள். இதனால், அவர்கள் பலவீனமடைகிறார்கள். இது உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே செய்யப்படுகிறது.
'இந்தியா' கூட்டணியினர் அரசியலமைப்பை மாற்றி எழுதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு முழு இடஒதுக்கீட்டையும் அளித்த திட்டமிட்டுள்ளனர். ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவிப்பதற்காக் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். ஒரே இரவில் முஸ்லிம்களை ஓபிசியாக அறிவிக்க நினைக்கிறார்கள்.
சமாஜ்வாதியும், காங்கிரஸும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறார்கள்.
மேலும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர்கள் சதித்திட்டத்தின் கீழ் பூர்வாஞ்சலை பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதால், அந்த பகுதி மக்கள் அவர்களை தண்டிப்பார்கள்.
உங்கள் வீடுகளுக்கு தீ வைத்த, நிலத்தை ஆக்கிரமித்த, கலவரக்காரர்களுக்காக கண்ணீர் சிந்திய 'இந்தியா' கூட்டணியுடன் தொடர்புடையவர்களை பூர்வாஞ்சலில் கால் வைக்க அனுமதிக்கக் கூடாது.
அம்பேத்கர் தலித்துகளுக்கு வழங்கிய இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கும் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி தனது அறிக்கையில் தெளிவாக எழுதியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி கடந்த 2014-க்கு முன்பு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிறுவனங்களை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவித்து, அங்கு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது” என்றார் பிரதமர் மோடி.
கோசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி அரவிந்த் ராஜ்பரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பாஜக சார்பில் நீரஜ் சேகர், ரவீந்திர குஷ்வாஹா ஆகியோர் பல்லியா, சேலம்பூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு கோசி, பல்லியா, சேலம்பூர் ஆகிய தொகுதிகளில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.