
பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெள்ளிக்கிழமை குற்றவியல் நீதிபதி முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழுவால் (எஸ்ஐடி) கைது செய்யப்பட்டிருப்பதால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வலை தங்கள் காவலில் ஒப்படைக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் கோரலாம் என்றும், நீதிமன்ற காவலில் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரஜ்வலின் தாயார் பவானி ரேவண்ணா, தனது கணவர் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளார். சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பவானி ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.
பவானி ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுகிறது. முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால் பவானியையும் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரு கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை முடியும் வரை எச்.டி.ரேவண்ணாவை காவலில் வைக்க வேண்டும் என்றும், அதனால் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிறப்பு புலனாய்வுக் குழு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு முன்பு, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பெங்களூருவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
ஜெர்மனியின் பெர்லினில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ரேவண்ணாவை கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தது. அதிகாரிகள் அவரின் பைகளை பறிமுதல் செய்து தனி காரில் கொண்டு சென்றனர். பெங்களூருவில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அலுவலகத்துக்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டன.
பிரஜ்வல் ரேவண்ணா, மே 27 அன்று வெளியிட்ட விடியோவில், மே 31 ஆம் தேதி எஸ்ஐடி முன் விசாரணைக்கு ஆஜராவதாகக் கூறியிருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளிகளை எஸ்ஐடி கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் நவீன் கவுடா, சேத்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சேத்தன் கவுடா, நவீன் கவுடா இருவரும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் விடியோக்கள் அடங்கிய பென்-டிரைவ்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.